அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மற்றும் தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகை தமிழில் சட்டப்படி அமைக்கப்படுவதை 100% உறுதி செய்வது குறித்து மாவட்ட குழு கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (09.04.2025) அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மற்றும் தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகை தமிழில் சட்டப்படி அமைக்கப்படுவதை 100 சதவிகிதம் உறுதி செய்வது குறித்து, தொடர்புடைய அரசு அலுவலர்கள், மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்க பிரதிநிதிகள், உணவு நிறுவன உரிமையாளர்கள், சங்க பிரதிநிதிகள், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக கொண்ட மாவட்ட குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசினால் தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் 1956 இன் கீழ் 2023 ல்“எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்னும் திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை தலைவராகவும் விருதுநகர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), விருதுநகர் மற்றும் சிவகாசி இணை இயக்குநர்கள் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், சிவகாசி மாநகராட்சி ஆணையாளர், நகராட்சி ஆணையாளர்கள், உதவி இயக்குநர்கள், தமிழ் வளர்ச்சித் துறை, பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்க பிரதிநிதிகள், உணவு நிறுவன உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் பிரதிநிதிகளை (VIDITSSIA) உறுப்பினர்களாகவும் கொண்ட மாவட்ட குழு அமைக்கப்பட்டது.அதன்படி, இன்று மாவட்ட குழு கூட்டமானது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழில் பெயர் பலகை அமைப்பது குறித்து “தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்ட விதிகள் விதி 15, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்ட விதி 42 B, மற்றும் தொழிற்சாலைகள் சட்ட விதிகள் 113 ஆகியவற்றில் அனைத்து கடைகள் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகைகள் “தமிழ் மொழியில் முதன்மையாகவும், பிரதானமாகவும் அமைக்க வேண்டும். பிற மொழிகளிலும் எழுத வேண்டும் எனில் தமிழ் மொழிக்கு கீழ் ஆங்கிலத்தில் இரண்டாவது இடத்திலும், இதர மொழிகளில் மூன்றாவது இடத்தில் அதற்கு கீழேயும் எழுதப்பட வேண்டும் என வரையறை “ செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களால், தங்கள் ஆட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து நிறுவன மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்களுடன் கூட்டம் நடத்தி தமிழில் பெயர் பலகை அமைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வர்த்தகர் , தொழிற்சாலை உரிமையாளர்கள் ,உணவு நிறுவன உரிமையாளர் சங்கங்கள் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு தமிழில் பெயர் பலகை அமைப்பது தொடர்பாக எடுத்துரைத்து 15.05.2025 க்குள் அனைத்து நிறுவனங்களிலும் 100% தமிழில் பெயர் பலகைகள் அமைக்க அறிவுறுத்த வேண்டும்.
ஏற்கனவே பல்வேறு ஆய்வுகளின் மூலம் தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் வர்த்தகர்கள் வணிகர்கள் தொழில் முனைவோர்களுக்கு 2025 மே மாதம் 15 ஆம் தேதி வரை மேற்கூறியவாறு பெயர் பலகை அமைக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது.15.05.2025ம் தேதிக்கு பின்னரும் தமிழில் பெயர் பலகை அமைக்காத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.எனவே, விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களிலும் 100% தமிழில் பெயர் பலகைகள் அமைக்க அனைத்து கடைகள் உணவு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து நிறுவன உரிமையாளர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
அரசாணை எண்.55 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை நாள்.02.07.2024ன்படி தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட அபராதமானது ரூ.50லிருந்து ரூ.2000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே சட்டப்படியும் தமிழ் உணர்வுடனும் அனைவரும் தமது நிறுவனங்களில் மேற்கூறியவாறு தமிழில் பெயர் பலகை அமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S அவர்கள் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் உட்பட பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்
0
Leave a Reply